கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிள்ளையான் என்று அழைக்கப்படுபவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான நீண்டகால விசாரணைகளை, இலங்கை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிறைவு செய்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலை விவகாரம் தொடர்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவராக உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் தடுத்து வைப்பு உத்தரவுகள் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான இறுதி வாதப்பிரதிவாதங்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனைத்து விசாரணைகளும் சுமுகமாக நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை பிறிதொரு நாளில் அறிவிப்பதாகப் பதிவு செய்துள்ளது.
இன்றைய விசாரணையின் போது, மனுதாரரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகளும் மற்றும் அரச தரப்பில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் தங்களின் இறுதிச் சமர்ப்பிப்புகளை நீதிமன்றில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
