நாட்டில் கடந்த காலங்களில் பழங்குடியினக் (Indigenous) குழந்தைகளுக்கு எதிராகக் குடியிருப்புப் பாடசாலைகளில் இழைக்கப்பட்ட கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் கலாசார இனப்படுகொலை (Cultural Genocide) குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சர்வதேச நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ (PPT) இந்த உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்தவுள்ளது.
இத்தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வுகள் மற்றும் சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மொன்றியல் நகரில் ஆரம்பமாகவுள்ளதாக, தற்பொழுது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேசத் தீர்ப்பாயம் குறித்து மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கியூபெக் பிராந்தியத்தின் பழங்குடியினப் பெண் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான மிஷேல் ரோபிடாஸ் (Michèle Rouleau) உணர்ச்சிப் பூர்வமாக தமது கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.
”கனேடிய நீதிமன்றங்கள் மற்றும் உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை எமது மக்கள் இழந்துவிட்ட சூழலில், இந்தச் சர்வதேசத் தீர்ப்பாயம் உலக நாடுகளுக்கு முன்னிலையில் உண்மையை உரக்கச் சொல்வதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தளமாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தாலியின் ரோம் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சர்வதேசத் தீர்ப்பாயம், கனடிய வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயமாகக் கருதப்படும் பழங்குடியினச் சிறுவர்களின் மரணங்கள் மற்றும் கட்டாயக் கலாசார மாற்றங்கள் குறித்துப் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் சுயாதீனப் புலனாய்வை மேற்கொள்ளவுள்ளது.
