ஆப்கானிஸ்தான் போர் நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பைத் தேர்வு செய்ததில், மத்திய அரசு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட கட்டடக்கலை நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற 40,000 கனடிய வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒட்டாவாவில் தேசிய நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான வடிவமைப்புப் போட்டியில், நிபுணர்களைக் கொண்ட ஒரு சுயாதீன நடுவர் குழு ‘டீம் டாவோஸ்ட்‘ (Team Daoust) என்ற நிறுவனத்தின் வடிவமைப்பையே சிறந்ததாகத் தேர்வு செய்தது.
ஆனால், மத்திய அரசு இந்த முடிவை நிராகரித்துவிட்டு, ‘டீம் ஸ்டிம்சன்‘ (Team Stimson) என்ற வேறொரு கட்டடக்கலை நிறுவனத்துக்கு 3.5 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
இது தற்போது பெரும் அரசியல் மற்றும் சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.
மத்திய அரசு தனது முடிவை நியாயப்படுத்த ஒரு இணையதளக் கருத்துக் கணிப்பைச் (Online Survey) சான்றாகக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
