கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உப பொலிஸ் பரிசோதகர் (சப்இன்ஸ்பெக்டர்) களனியில் பொலிஸ் பயிற்சி பாடநெறியில் கற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி கைதான நபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் 21ம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2023ம் மாச் 18ம் திகதி கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் போது ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அவரை மட்டு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் குற்றம் தொடர்பான களணியில் உள்ள பொலிஸ் பயிற்சி நெறிக்கு கற்பதற்காக சென்றுள்ள நிலையில், இந்த ஆள் கடத்தல் கொள்ளை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த சிஜடி யினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பயிற்சியில் இருக்கும் போது புதன்கிழமை (20) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை 21ம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
