இரண்டு முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ (Order of Canada) மீளப்பெறப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய ஆளுநர் நாயகமான மேரி சைமனின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த இரு பிரமுகர்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய காரணத்தினாலேயே, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ‘ஆர்டர் ஆஃப் கனடா’ (Order of Canada) விருது மீளப்பெறப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதநேயத் தொண்டர் பீட்டர் டல்க்ளிஷ் (Peter Dalglish) மற்றும் கனடாவின் முன்னணி பொறியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் லெமேர் (Jacques Lamarre) ஆகிய இருவருமே இவ்வாறு தங்களது கௌரவ விருதுகளை இழந்துள்ளனர்.
குறித்த விருதுகளை மீளப்பெறுவதற்கான அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்பு ‘கனடா கெசட்’ (Canada Gazette) நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டது.
கனடிய சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கும் சட்டங்களுக்கும் முரணாகக் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் விருதுகளைப் பறிப்பது ஒரு ‘அதிவிசேட நடவடிக்கை’ (An Extraordinary Measure) என ஆளுநர் மாளிகையான ரிடோ ஹால் (Rideau Hall) தெரிவித்துள்ளது.
