மொன்றியல் நகரில் வார இறுதியில், கிளப்புகளில் பணிபுரியும் நடனக் கலைஞர்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை புகழ்பெற்ற Formula 1 Grand Prix கார் பந்தயப்போட்டி மொன்றியல் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே, கிளப்புகளில் பணிபுரியும் நடனக் கலைஞர்களின் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய ஊதியம் இல்லாமை மற்றும் கிளப் உரிமையாளர்களின் சுரண்டலைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் உள்ள பெரும்பாலான இரவு நேர விடுதிகளில் நடனக் கலைஞர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, நடனக் கலைஞர்கள் அந்த கிளப்பில் பணிபுரிய வீட்டு வரி(House Fee) என்ற பெயரில் கிளப்உரிமையாளர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையே காணப்படுகின்றது.
Formula 1 Grand Prix கார் பந்தயப்போட்டிக் காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மொன்றியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது கிளப் உரிமையாளர்களுக்குக் கோடிக்கணக்கான லாபத்தைத் தரும் வாரமாகும்.
இந்த முக்கியமான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வதன் மூலம், உரிமையாளர்களுக்குப் பொருளாதார அழுத்தம் கொடுத்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என, கிளப் நடனக் கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
