மொண்ட்ரீயல் நகரின் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், மெட்ரோ போக்குவரத்து வழித்தடங்களில் தடுப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தக் கோரி, கியூபெக் மாகாணத்தின் நீதிவிசாரணை அதிகாரிகள் (Coroners) அவசரமான மற்றும் கடுமையான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.
மொண்ட்ரீயல் போக்குவரத்து நிறுவனம் (STM) வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் 25 தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும், 2015 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில், மெட்ரோவில் நிகழ்ந்த 92 தற்கொலை மரணங்களை நீதிவிசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
ரயில் தண்டவாளங்களுக்குச் செல்ல முடியாதபடி தடுக்கும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்றான பிளாட்ஃபார்ம் திரை கதவுகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்துமாறு மொண்ட்ரீயல் போக்குவரத்து நிறுவனத்துக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிலையங்களின் அனைத்து பணியாளர்களுக்கும் தற்கொலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சிகளைக் குறிக்கக்கூடிய நடத்தைகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு சோதனைத் திட்டமும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
