கனடாவின் முன்னாள் செனட்டர் டான் மெரிடித் தன் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம், கனடாவின் செனட் சபையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த பல ஆண்டுகால சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
முன்னாள் செனட்டர் டான் மெரிடித் மீது மூன்று பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தன.
மெரிடித்திடம் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரே இந்த வழக்கில் புகார் அளித்திருந்தார்.
அப்போதைய காலக்கட்டத்தில் இந்தச் சம்பவங்களைப் புகாரளிக்க அஞ்சியதாகவும், அவ்வாறு செய்தால் தனது வருங்கால வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சியதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செனட் சபை நெறிமுறைகள் அதிகாரி (SEO) இந்த கூற்றுகளை விசாரித்த பின்னரே ஒட்டாவா காவல் துறையினரால் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நரிஸ்ஸா சோம்ஜி (Narissa Somji), ஊழியரின் கூற்றுகள் மற்ற இரண்டு சாட்சிகளின் சாட்சியங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும் தெரிவித்து, முன்னாள் செனட்டர் டான் மெரிடித்தை விடுவித்துள்ளார்.
