கியூபெக் மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்க முயலும் ‘பார்ட்டி கியூபெகோவா’ (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன், மத்திய அரசு தங்களை உளவு பார்ப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிளாமோண்டன், கனடிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (CSIS) போன்ற மத்திய அரசு நிறுவனங்கள், கியூபெக் சுதந்திர இயக்கத்தின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அமைதியான முறையில் அரசியல் செய்பவர்களை அரசு உளவு பார்ப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்ட பிளாமோண்டன், இதற்கான சில வரலாற்றுச் சான்றுகளைச் சுட்டிக்காட்டினார். 1970-களில் றோயல் கனடிய மவுண்டட் போலீஸ் (RCMP) அமைப்பானது, கியூபெக் பிரிவினைவாதக் கட்சியினருக்கு எதிராகச் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, முந்தைய விசாரணை ஆணைக்குழுக்கள் உறுதி செய்துள்ளன.
தனது கட்சியின் உறுப்பினர்களையோ அல்லது ஆதரவாளர்களையோ மத்திய உளவு அமைப்புகள் தற்போது கண்காணிக்கவில்லை என்பதற்கான முறையான “உத்தரவாதத்தை”, மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவுக்குள் வெளிநாட்டுத் தலையீடுகள் பற்றிப் பேசும் மத்திய அரசு, முதலில் தன் நாட்டு அரசியல்வாதிகளையே உளவு பார்ப்பதை நிறுத்த வேண்டும் என, ‘பார்ட்டி கியூபெகோவா’ (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் வலியுறுத்தியுள்ளார்.
