மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, இந்திய- வங்கதேச எல்லைப் பகுதியில் முள்வேலி அமைப்பதற்கான நிலங்களை 45 நாட்களுக்குள் எல்லை பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைப்பதற்கு, அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக கடந்த 9 ஆம் திகதி அன்று பதவியேற்ற சுவேந்து அதிகாரி, நேற்றைய தினம் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.
பங்களாதேஷ் நாட்டுடனான எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படாமல் உள்ள இடங்களுக்கான நிலங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BSF அமைப்பிடம் வழங்குவதற்கு, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கான நிலமாற்றப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, இன்னும் 45 நாட்களுக்குள் முழுமையாக முடிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் எல்லை வேலி அமைக்கும் பணி தடைபட்டிருந்தது.
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுத்து, தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதே தமது அரசின் முதல் கடமை என்று, மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்காக, மேற்குவங்கத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் நில வருவாய்த்துறைச் செயலர்களுக்குக் கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மட்டுமின்றி, மேற்குவங்க மாநிலத்தின் முந்தைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் உடனடியாக அமல்படுத்த, அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
