சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்தது மற்றும் அவற்றை வைத்திருந்தது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் மொன்றியலைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன் (Benoit Bourgon) மொன்றியலில் சிவில் மற்றும் வணிக ரீதியிலான வழக்குகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
கியூபெக் மாகாண காவல்துறையின் (Sûreté du Québec) சிறுவர் உரிமைமீறல் தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.
மொன்றியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்தச் சட்டவிரோதச் செயல்கள் 2013 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானவுடன், அவர் பணியாற்றி வந்த சட்ட நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து அவரது விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
போர்கனின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப் மற்றும் கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது அவர் கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
