யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர், விகாரையில் குடிநீர் எடுக்கச் சென்ற 17 வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி குறித்த பிக்குவின் கைது தொடர்பாகவும், சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும், நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான 12 சட்டத்தரணிகளால் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் 29 ஆம் திகதி கட்டளைக்காக வழக்கை மன்று தவணையிட்டது.
