தேசிய மக்கள் சக்தி கிழக்கு வடக்கு தெற்கு என மட்டும் அல்லாமல் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று இந்த மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இதன்படி மட்டக்களப்பில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள், பறங்கியர் என எல்லா மக்களும் மட்டக்களப்பு வரலாற்றில் முதல் முறையாக இங்கு மே தினத்தை கொண்டாடி வருகின்றோம். அதனால் இது ஒரு முக்கியமான ஒரு நாளாகும் என தேசிய மக்கள் சக்தி அமைச்சர் சுனிர் ஹந்திநெத்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மேதினம் இன்று வெள்ளிக்கிழமை (01) கல்லடி பாலத்தில் இருந்து காந்திபூங்காவரை ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்கடிப்பேம் என கோஷங்கள் எழுப்பினர் இதில் கலந்துக் கொண்ட அமைச்சர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
இது ஒரு மேதினம் மட்டும் அல்ல மதவாதத்துக்கும், இனவாதத்துக்கும் எதிராக போராடுகின்ற நாளாகும். இந்த மாவட்டத்தில் மேடையில் நிற்கின்ற நாங்கள் மட்டுமல்ல தமிழ் சிங்கள முஸ்லீம் என்று இல்லாது ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
2024 ம் ஆண்டு இந்த நாட்டை பெறுப்பேற்ற போது இந்த நாடு எங்கே இருந்தது ? கடனில் இருந்தது அந்த கடனை செலுத்த முடியாது இருந்தோம். மக்கள் வீதியில் வரிசையில் காத்திருந்தனர், விவசாயிகளுக்கு பசளையின்றி இருந்தனர், நெல்லுக்கு விலை இருக்க வில்லை, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வில்லை மலைநாட்டு தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் இல்லை.
இவ்வாறு ஒரு அரசாங்கம் எங்கள் கையில் கிடைக்கவில்லை, மிகவும் பிரச்சனையான நாடு தான் கிடைத்தது. இப்போது எதிர்கட்சியில் இருப்பவர்கள் அன்று மக்களுக்கு என்ன கூறினார்கள் எங்களுக்கு ஆட்சியை கொடுக்க வேண்டாம் என்றனர் என்ன காரணம், தேசிய மக்கள் சக்திக்கு இந்த அரசாங்கத்தை வழங்கினால் அனுரகுமார திசாநாயக்கவிற்கு இந்த நாட்டை வழங்கினால் 6 மாதத்தில் இந்த நாடு வீழ்சியடையும். எல்லோரும் பட்டினியாக இருக்க வேண்டிவரும் என்றனர். எனவே இதனை முதல் முதலாக மாற்றி அமைக்க வேண்டும் என முயற்சித்தவர்கள் யார்?
இந்த நாட்டு மக்கள் அதனை முடிவெடுத்தனர். கடந்த 76 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஒரு சட்டம் இருக்க வில்லை ஆட்சி செய்தவர்கள் கள்வர்கள் அவர்கள் மக்களை ஏமாற்றி வந்தனர் எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் தான் இருந்தன இத்துடன் சாதாரண மக்களுக்கு ஆயுதங்களை கொண்டு அடக்குகின்ற ஒரு ஆட்சி தான் இருந்தது.
எங்களுக்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப தெரியாது என்றனர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தெரியாது என்றனர் பல கதைகளை சொன்னார்கள் ஆனால் நாங்கள் இன்று கடன்களை மீள் செலுத்தி வருகின்றோம் என்றார்.
