ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ (Michael Rousseau), பதவி விலகும் முன்பாக நாடாளுமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு மொன்றியலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மைக்கேல் ரூசோ, தான் மொன்றியலில் 15 ஆண்டுகளாக வசித்த போதிலும் தனக்கு பிரெஞ்சு மொழி பேசத் தெரியாது என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து கியூபெக் மாகாணத்தின் கலாசாரம் மற்றும் மொழியை அவர் அவமதித்துவிட்டதாகக் கூறி, மாகாணம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, அவர் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
நாட்டின் சட்டப்படி, ஏர் கனடா போன்ற மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சேவைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவர், அங்கிருக்கும் பெரும்பான்மை மக்களின் மொழியைத் தெரியாது என்று கூறியது கியூபெக் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது, ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ எதிர்வரும் மே மாதம் 31-ஆம் திகதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், அவர் வெளியேறுவதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி கற்றலில் அவரது முன்னேற்றம் குறித்து நாடாளுமன்ற உத்தியோகபூர்வ மொழிகள் குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என பிளாக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சி கோரிக்கை விடுத்தது.
ஆனால், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.
ரூசோ விரைவில் ஓய்வு பெறவுள்ளதால், அவரை அழைப்பது கால விரயம் என்றும், அவருக்குப் பதிலாகப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை அழைத்து நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களைக் கேட்பதே சிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
