அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவரும் பேச்சுக்கே இடமில்லை என்று கியூபெக்கின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மதுபானங்கள் மீண்டும் கியூபெக் மதுபானக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுமா என்ற கேள்வியை, அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, கியூபெக்கின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
”கனேடிய உற்பத்திகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தக வரிகளை நீக்கும் வரை, அமெரிக்க மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்” என கியூபெக்கின் புதிய முதலமைச்சர் உறுதிபடக் கூறினார்.
கனடா தனது பொருளாதாரத்திற்கு அமெரிக்காவையே முழுமையாகச் சார்ந்துள்ளது என்றும், எனவே மதுபானங்கள் மீதான தடையை கனடா உடனே நீக்க வேண்டும் என்றும் அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கியூபெக் முதலமைச்சர் ஃப்ரெச்செட், கனடா என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி என்பதை அமெரிக்கா மறந்துவிடக் கூடாது எனவும் மிரட்டல்களுக்குப் பயந்து சலுகைகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கியூபெக் மாகாணத்தைப் போலவே, ஒன்ராறியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்டும் அமெரிக்க மதுபானங்களுக்குத் தனது மாகாணத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.
அமெரிக்கா தனது பிடிவாதத்தைக் தளர்த்தி, வர்த்தக வரிகளை நீக்கினால் மட்டுமே அமெரிக்க மதுபானங்கள் மீண்டும் விற்பனைக்கு வரும் என்பதில் இரு மாகாணத் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறையில் உள்ள இந்தத் தடையால், கியூபெக் மக்கள் உள்நாட்டு மதுபானங்களைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கடந்த ஓராண்டில் கியூபெக் மாநிலத்தின் உள்நாட்டு மதுபான விற்பனை 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடைகளில் மீதமிருந்த அமெரிக்க மதுபானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்கப்பட்டு, அந்த வருமானம் உணவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
