கியூபெக்கில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொலைகளைத் (Femicides) தடுக்கப் புதிய சட்டத்தைக் கொண்டுவருமாறு மாகாணத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டிடம் (Christine Fréchette) சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 பெண்கள் தங்களது வாழ்க்கைத்துணைகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில்,இன்னொரு பெண்ணின் உயிர் போவதற்கு முன் செயல்படுங்கள் என, அவர்கள் கியூபெக் முதல்வரை வலியுறுத்தியுள்ளனர்.
சுமார் 600-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கையெழுத்திட்ட பகிரங்கக் கடிதம் ஒன்று இன்று கியூபெக் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நபர் தனது துணையைத் தெரிந்துகொள்ளும் போது, அந்த நபருக்கு ஏற்கனவே வன்முறைப் பின்னணி உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என கியூபெக்கின் ஆளும் தரப்பிடம் கோரப்பட்டுள்ளது.
மே 5-ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சபையை உடனடியாகக்
கூட்டி இதற்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான தங்குமிடங்களுக்கு (Shelters) வழங்கப்பட்டு வரும் நிதி, வாழ்க்கைச் செலவுகள் சார்ந்த தேவையுடன் ஒப்பிடும்போது வெறும் 40 சதவீதமாகவே உள்ளது எனவும் இதனை உடனடியாக அதிகரிக்க வேண்டும்
எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
