கியூபெக் மாகாணத்தின் மதுபான விற்பனை வாரியமான SAQ, வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்ட்போர்டு பெட்டிகளை (Used cardboard boxes) வழங்குவதை நிறுத்தும் தனது முந்தைய முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், இனி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் பெட்டிகள் வழங்கப்படமாட்டாது என, கியூபெக் மாகாணத்தின் மதுபான விற்பனை வாரியமான SAQ அறிவித்திருந்தது.
மதுபானப் போத்தல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப் பெட்டிகளே சிறந்த வழி என்றும், அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பும் முன் மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவது (Reuse) சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, மாகாணம் முழுவதுமுள்ள அனைத்து கிளைகளிலும் மீண்டும் பெட்டிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக SAQ நிர்வாகம் நேற்று அறிவித்தது. SAQ நிறுவனம் தனது 2030 ஆம் ஆண்டுக்கான பசுமை இலக்குகளை எட்ட முயன்றாலும், நுகர்வோரின் வசதியைக் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பேருந்துகளில் பயணம் செய்வோர் மற்றும் முதியவர்களுக்கு, கண்ணாடிப்போத்தல்களைப் பைகளில் கொண்டு செல்வதை விட பெட்டிகளில் கொண்டு செல்வது அதிக பாதுகாப்பை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்டிகள் வழங்கப்பட்டாலும், வரும் காலங்களில் மீண்டும்
பயன்படுத்தக்கூடிய பைகளை (Reusable bags) மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கப் போவதாக SAQ தெரிவித்துள்ளது.
