மொன்றியலின் சென்-லியொனார்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜான்-தலோன் (Jean-Talon) வீதி மற்றும் து பொன்டோயிஸ் (de Pontoise) வீதிகளின் சந்திப்பிற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளதாக அதிகாலை 4:15 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு பிரிவின் நுழைவாயில் கதவுக்கு முன்னால் மர்ம நபர்கள் தீயைப் பற்றவைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள குடியிருப்பு வரை பரவியது.
மொன்றியலின் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில், தீயைப் பற்றவைக்கப் பயன்படுத்தப்பட்ட சில எரியூட்டும் பொருட்கள் (Incendiary materials) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மொன்றியலின் சென்-லியொனார்ட் பகுதியில் சமீபகாலமாக வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து இத்தகைய தீவைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
