16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் (Social Media) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI Chatbots) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மொன்றியலில் நடைபெற்ற ஆளும் லிபரல் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, கலாசார மற்றும் அடையாளத் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) இந்தத் தகவலை இன்று உறுதிப்படுத்தினார். சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டு முக்கிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தைப் போலவே, 16 வயதுக்குக் குறைந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கும் பொறுப்பைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும். ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் சிறுவர்களுக்குப் பாதகமான கருத்துக்களை வழங்கக்கூடும் என்பதால், 16
வயதிற்குட்பட்டோர் இவற்றைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது மற்றும் வயதுச் சான்றிதழ்களை
எப்படிச் சரிபார்ப்பது என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, 75 சதவீதமான கனடியர்கள் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைத்தளத் தடையை ஆதரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து விவாதிக்கத் தயாராக உள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிமனிதத் தரவுப் பாதுகாப்பு (Privacy) ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில், இந்த புதிய இணையவழித் தீங்கு தடுப்புச் சட்டம்' (Online Harms Bill) விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
