நாட்டில் நேற்றைய தினம் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஒன்டாரியோவின் இரண்டு தொகுதிகள் மற்றும் கியூபெக்கின் டெரெபோன் (Terrebonne) தொகுதி ஆகிய மூன்றிலும் லிபரல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 174 ஆசனங்களுடன் உத்தியோகபூர்வமாக ‘பெரும்பான்மை’ (Majority) பலத்தை அடைந்துள்ளது.
கனடிய வரலாற்றில், பொதுத்தேர்தல் இன்றி, இடைத்தேர்தல்கள் மற்றும் கட்சித் தாவல்கள் மூலம் ஒரு சிறுபான்மை அரசானது, பெரும்பான்மை அரசாக மாறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒன்டாரியோ மாகாணத்தின் யுனிவர்சிட்டி—ரோஸ்டேல் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த டேனியல் மார்ட்டின், சுமார் 65 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல, ஒன்டாரியோ மாகாணத்தின் ஸ்கார்பாரோ சவுத்வெஸ்ட் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த டோலி பேகம் வெற்றி பெற்றுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் டெரெபோன் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த டாட்டியானா ஆகஸ்ட் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இதே டெரெபோன் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் டாட்டியானா ஆகஸ்ட் வெற்றி பெற்றிருந்தார்.
எனினும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றி என்ற காரணத்தினால், அந்த டெரெபோன் தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து டெரெபோன் தொகுதியில் நேற்றைய தினம் அந்த மறுதேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை 700-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டாட்டியானா ஆகஸ்ட் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிகளின் மூலம் நாட்டின் பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான மார்க் கார்னி, நாடாளுமன்றத்தின் தமது ஆட்சியைத் தக்கவைப்பதற்கு, இனி மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதுவரை சிறுபான்மை அரசாக இருந்ததால் முடங்கிக் கிடந்த தேசிய பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான சட்டமூலங்களை இனி எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்ற முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்த வெற்றி மக்கள் தமது திட்டங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது” எனவும் ”கனடாவை வலுப்படுத்த இது ஒரு புதிய தொடக்கம்” எனவும் பிரதமர் மார்க் கார்னி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அடுத்த பொதுத் தேர்தல் 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
அதுவரை, பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியின் மத்திய அரசாங்கம் அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
