அரசியல் களத்தில் இன்று நடைபெறும் மூன்று பாராளுமன்ற இடைத்தேர்தல்கள், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சிக்கு ஒரு ‘பெரும்பான்மை’ ஆட்சியை வழங்கவுள்ளன.
கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லிபரல் கட்சியில் இணைந்து வரும் நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொராண்டோவின் இரண்டு தொகுதிகள் மற்றும் கியூபெக்கின் டெரெபோன் (Terrebonne) தொகுதி ஆகியவற்றில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் கூட லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும் என்ற நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, பெரும்பான்மை பலம் கிடைத்தாலும், தான் தன்னிச்சையாகச் செயல்படப் போவதில்லை என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
“நாட்டின் தற்போதைய சூழலில் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே சிறந்தது” என லிபரல் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஸ்டீவன் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். இன்றைய தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
