கியூபெக் மாகாணத்தை ஆளும் ‘கோயலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிப் பரப்புரைகளும் வாக்குப்பதிவும் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர், தற்போதைய கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோவிற்குப் (François Legault) பதிலாக, கியூபெக்கின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்பார்.
இந்த உட்கட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அறிவிக்கப்படவுள்ளன.
சுமார் 20,500 கட்சி உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 65.9 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஏற்கனவே தொலைபேசி மற்றும் இணையம் வாயிலாகத் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு இந்தக் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பிரான்சுவா லெகோவே தலைமை வகித்து வந்தார். முதல் முறையாக அவர் பதவியிலிருந்து விலகுவதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்க உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தத் தலைமைத்துவப் போட்டியில் முன்னாள் அமைச்சர்களான பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) மற்றும் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) ஆகிய இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகளில் CAQ கட்சி பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், புதிய தலைவருக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
