நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய துறைமுக விரிவாக்கப் பணிகளில் ஒன்றான மொன்றியல் துறைமுகத்தின் கொத்ரேகூர் (Contrecœur) முனைய விரிவாக்கப் பணிகளை, பிரதமர் மார்க் கார்னி உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சுமார் 1.16 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்றிட்டம், கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் துறைமுக விரிவாக்கம் நாட்டின் தேசிய நலன் சார்ந்த ஒரு திட்டமாகக் கருதப்பட்டு, துரித கதியில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வரும்போது, மொன்றியல் துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறன் 60 சதவீதத்தால் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு மேலதிகமாக 1.15 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும் என்று கூறப்படுகின்றது.
இதன் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் பின்னரான செயல்பாடுகள் மூலம் மொன்றியல் நகரில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகம் சார்ந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளைத் திசைதிருப்ப இந்த விரிவாக்கம் உதவும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்போது, இது வட அமெரிக்காவின் மிக முக்கியமான வர்த்தக நுழைவாயிலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
