கியூபெக் மாகாணத்திலுள்ள லோரென்டியன்ஸ் (Laurentians) பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது, பல மில்லியன் டொலர் பெறுமதியான 67 கிலோ கிராம் கொகெய்ன் போதைப்பொருள், கைத்துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றுடன் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்-சோவர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய செபாஸ்டியன் மொரல் (Sébastien Morel), 50 வயதுடைய ஈவன்ஸ் பியர்லூயிஸ் (Evens Pierrelouis) மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் அலார்ட்வில் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ரொட்ரிக் ஜியோனட் (Rodrigue Gionet) ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலம்பியா நாட்டில் இருந்து சர்வதேச ரீதியாக இடம்பெற்று வந்த பாரிய கொகெய்ன் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளதாகப் கியூபெக் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இச்சோதனையின் போது 67 கிலோ கிராம் தூய கொகெய்ன் போதைப்பொருள், 115,000 கனேடிய டொலர் பணம், துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பல தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போதைப்பொருள் இறக்குமதி செய்தல் மற்றும் கடத்தல் நோக்குடன் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் செயின்ட்-ஜெரோம் (St-Jérôme) நீதிமன்றத்தில் முதற்கட்டமாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

