கியூபெக் மாகாணத்தின் கல்வி முறையில் நிலவும் Tiered system எனப்படும் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கும், அவர்கள் இடையில் பள்ளியை விட்டு விலகுவதற்கும் முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் சொலிடயர் கட்சியின் முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரான்சுவா டேவிட் (Françoise David) இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின் தற்போதைய கல்வி முறையை “மூன்று வேகக் கல்வி முறை” எனச் சாடியுள்ள அவர், இது மாணவர்களைப் பிரிக்கிறது என விளக்கியுள்ளார்.
தனியார் மற்றும் சிறப்புப் பள்ளிகள் அதிக மதிப்பெண் பெறும் மற்றும் வசதி படைத்த மாணவர்களை இவை உள்வாங்கிக் கொள்கின்றன என, பிரான்சுவா டேவிட் சுட்டிக்காட்டினார்.
கற்றல் குறைபாடுகள் மற்றும் நடத்தை சவால்கள் கொண்ட மாணவர்கள் சாதாரண பொதுப் பள்ளிகளில் அதிகளவில் குவிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர், இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, ஆண் குழந்தைகள் பள்ளியில் இருந்து பாதியிலேயே வெளியேறும் விகிதம் (Dropout rate) கவலைக்கிடமாக இருப்பதாகப் பிரான்சுவா டேவிட் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய கல்வி முறை ஒரே இடத்தில் அமர்ந்து கற்கும் முறையை வலியுறுத்துகிறது.
இது அதிக ஆற்றல் கொண்ட ஆண் குழந்தைகளுக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களைக் கல்வியில் இருந்து அந்நியப்படுத்துகிறது என பிரான்சுவா டேவிட் தெரிவித்துள்ளார்.
