கியூபெக் மாகாணத்தின் முதலமைச்சராக கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய பிரான்சுவா லெகோ (François Legault), நேற்று சட்டமன்றத்தில் தனது உணர்ச்சிகரமான இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார்.
தனது 28 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வில், கியூபெக் மக்கள் தங்களது தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என, அவர் உருக்கமான கோரிக்கையை விடுத்தார். தனது உரையில், கியூபெக்கின் பிரெஞ்சு மொழி மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகத் தனது அரசு எடுத்த நடவடிக்கைகளை லெகோ நியாயப்படுத்தினார்.
அவர் உரை நிகழ்த்துவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, Bill 9 எனும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கியூபெக் எப்போதும் கியூபெக்காகவே இருக்க வேண்டும் என்பதில் நாம்
உறுதியாக இருக்க வேண்டும் என பிரான்சுவா லெகோ இதன்போது குறிப்பிட்டார்.
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து,எயார் ட்ரான்ஸாட் (Air Transat) எனும் விமான நிறுவனத்தைத் தொடங்கி, பின்னர் முதலமைச்சராக உயர்ந்த தனது பயணத்தை அவர் கண்ணீருடன் நினைவுகூர்ந்தார்.
உயர்கல்வி கற்காத தனது பெற்றோரே தனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தனர் என்றும், தான் முதலமைச்சரானதைப் பார்க்கத் தனது தந்தை உயிரோடு இல்லையே என்பது தனது வாழ்வின் பெரும் குறை என்றும் அவர் தெரிவித்தார்.
2011-ஆம் ஆண்டில் தான் தொடங்கிய CAQ கட்சி, 2018 மற்றும் 2022 தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். கியூபெக் முதல்வரை வழக்கமாகக் கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட, நேற்று அவருடைய நீண்டகால பொதுச் சேவையைப் பாராட்டி கௌரவித்தனர்.
சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோவுக்கு மரியாதை செலுத்தினர். அரசியல் என்பது கடினமானது; 28 ஆண்டுகள் மக்கள் சேவையில் இருப்பது சாதாரணமானதல்ல என எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினர்.
எதிர்வரும் 12 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள CAQ கட்சி மாநாட்டில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவரிடம் லெகோ தனது முதலமைச்சர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கவுள்ளார். கிறிஸ்டின் பிரெச்செட் அல்லது பெர்னார்ட் டிரைன்வில் ஆகிய இருவரில் ஒருவர் கியூபெக்கின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
