முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான சிறுவர் மேம்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் சிறிய தலைவர்கள் (Little Leaders – Strengthening Children’s Clubs for Holistic Child Development and Community Participation in Mullaitivu District) திட்டத்தின் கீழ் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர்கள் சமூக மாற்றத்தின் சக்திவாய்ந்த முகவர்களாக திகழ்கின்றனர். குழந்தைப் பருவத்தில் உருவாகும் மனப்பான்மைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் நெறிமுறைகள், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் குடிமைப் பங்கேற்பு போன்ற துறைகளில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, அவர்களை நெறிமுறை மதிப்புகள், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை உட்பொதித்த “சிறிய தலைவர்கள்” ஆக உருவாக்கி, குடும்பங்கள், பாடசாலைகள் மற்றும் சமூகங்களில் நல்ல நடத்தைகளை இயல்பாக பரப்பும் சமூக மாற்றத் தூதர்களாக (Ambassadors of Social Change ) உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராம அலுவலர் பிரிவுகளில் சிறுவர் கழகங்கள் இயங்கி வந்தாலும், அவை நடத்தை மாற்றம், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் செயற்பாட்டு சமூகப் பங்கேற்புக்கான வலுவான தளங்களாக முழுமையாக பயன்படுத்தப்படாத நிலை காணப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை மேம்படுத்தி வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினம்(26) மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் மற்றும் ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோருடன் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை பார்வையிட்டு, சிறுவர் கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
