வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க, நாட்டின் ராணுவம் களமிறக்கப்படலாம் என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Gen. Jennie Carignan) தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஜெனரல் கரிக்னன், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் சூழல் மிகவும் “ஆபத்தானது” என்று வர்ணித்தார்.
ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளுக்குத் தற்காப்பு உதவிகளை வழங்குவது குறித்து கனடா ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளின் ராணுவத் தலைவர்களுடன் கனேடிய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதேவேளை, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் கனடா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், மறைமுகமாகப் போருக்குள் நுழைய அரசு முயல்வதாக, நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மத்திய அரசு நாட்டின் ராணுவத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு முன், அது குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் முன்னெடுக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என, கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
