கிங்ஸ்டனில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி மருத்துவத் தாதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவத் தாதிக்கான தகுதிச் சான்றுகளைப் போலியாகத் தயாரித்தமை மற்றும் சுமார் 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததாகவும் மேலும் பல தொடர்ச்சியான பொய்களைக் கூறியமை முதலான குற்றச்சாட்டுகள் அந்தப் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளன.
24 வயதானவரும் மெடலின் ஸ்டென்ஹவுஸ் என்ற பெயருடையவருமான அந்தப் பெண், மருத்துவத் தாதிக்கான தேர்வில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ தெரியாத முதிர்ச்சியின்மையின் விளைவாக, குற்றம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எலிசபெத் ஃப்ரை சொசைட்டியுடன் இணைந்து 240 மணிநேர சமூக சேவையை ஆற்றுமாறும், கிங்ஸ்டன் மருத்துவமனைகளுக்கான பல்கலைக்கழக அறக்கட்டளைக்கு 40,000 டொலர் நிதியைச் செலுத்துமாறும் 18 மாதங்கள் வீட்டுக்காவலில் இருக்குமாறும் அவருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் சுகாதார அமைப்பை நம்பியிருக்கிறார்கள் என்றும், தகுதியான நிபுணர்களால் அவர்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
திட்டமிட்டதாகவும், தொடர்ச்சியாகவும் இருந்த ஸ்டென்ஹவுஸின் நடத்தையானது, மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த பலருக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியம் கொண்டிருந்தது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.