டிக்டாக் (TikTok) நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளை நாட்டினுள் நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு விதித்த உத்தரவு செல்லும் என, மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிக்டாக் (TikTok) நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது
கடந்த 2024-ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டில் உள்ள டிக்டாக்கின் அலுவலகங்களை மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த முடிவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் வழக்கினைத் தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கினை விசாரித்து, நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் நடவடிக்கை சட்டபூர்வமானது என்று நீதிபதி உறுதிப்படுத்தினார்.
டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance), சீன அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் கனடா குடிமக்களின் தரவுகள் (Data) திருடப்படலாம் என்றும் நாட்டின் உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
வெளிநாட்டு முதலீடுகள், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில், அதைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு உண்டு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தடையை விதிக்கும் முன்பு டிக்டாக் நிறுவனத்திற்குத் தகுந்த விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து, டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
