கனடாவின் கூட்டாட்சி அரசு, பாஸ்போர்ட் சேவையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல், முழுமையான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்பட வேண்டும் என புதிய சேவை தரநிலை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரர்களுக்கு அது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அதாவது, அவர்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும்.
புதிய விதிகளின்படி, சேவை கனடா மையங்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவாதம் பொருந்தும். அஞ்சல் மூலமாக அல்லது கனடா போஸ்ட் மையங்கள் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் இதில் சேர்க்கப்படாது.
குடிமக்கள் சேவைகள் அமைச்சர் தெரிவித்ததாவது:
“பயணம், வேலை, குடும்ப இணைவு போன்றவற்றிற்கு பாஸ்போர்ட் மிகவும் அவசியமானது. அதனை காலத்திற்கு உட்பட வழங்க முடியாவிட்டால், அந்தச் செலவை மக்களிடம் இருந்து பெறுவது நியாயமல்ல” என்று கூறினார்.
மேலும், பணத்தைத் திரும்பப் பெற தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. 30 வேலை நாட்களை மீறியவுடன், கட்டணம் தானாகவே முன்பு செலுத்திய முறையில் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விண்ணப்பம் முழுமையாக ஏற்கப்பட்ட பின்னரே 30 நாள் கணக்கெடுப்பு தொடங்கும். கையொப்பம் இல்லாமை, தவறான தகவல்கள் அல்லது புகைப்படப் பிழைகள் இருந்தால், அவை சரிசெய்யப்படும் வரை காலவரம்பு நிறுத்தப்படும்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பாஸ்போர்ட் தாமதங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாக இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.
இந்த புதிய தரநிலை 2026ஆம் ஆண்டின் பயண உச்சகட்டத்தை முன்னிட்டு சேவை கனடா தங்களின் பணியாளர்களை அதிகரித்து, செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான காலத்தை வழங்கும் வகையில், ஒரு ஆண்டிற்குள் அமுலுக்கு வரும்.
