மொன்றியாலின் வர்டன் (Verdun) பகுதியில் நேற்று மதியம் நிகழ்ந்த வீதி விபத்தில் பலத்த காயமடைந்த 92 வயது மூதாட்டி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில், கில்பெர்ட்-டுபாய் (Gilberte -Dubé) வீதி மற்றும் கெடான்-லபெர்ஜ் (Gaétan-Laberge) சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அந்த வழியாகச் சென்ற பிக்கப் (Pickup) ரக லொறி ஒன்று எதிர்பாராதவிதமாக வீதியைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியது.
விபத்தை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டார்.
இருப்பினும், இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் மொன்றியல் பொலிஸார் (SPVM), விபத்து நிகழ்ந்தபோது வாகனம் மிகக் குறைந்த வேகத்திலேயே சென்றதாக சாட்சியங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்திற்கு மதுபோதையோ அல்லது அதிவேகமோ காரணம் அல்ல என்று பொலிஸ் தரப்பு அதிகாரி ஜீன்-பியர் பிரபான்ட் தெரிவித்துள்ளார்.
தற்போது மொன்றியல் காவல்துறையின் விபத்து விசாரணைப் பிரிவினர், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததற்கான உண்மையான பின்னணியைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
