நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலர் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் கொலையாளிகள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களாக உள்ளனர்.
அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக, தங்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு நிதியை பெற்றுக்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கொலைகள் 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை மட்டுமே செலவில் செய்யப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு பணத்திற்குப் பதிலாக போதைப்பொருள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தன.
இந்த ஆண்டு ஜனவரி முதல், இலங்கையில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 76 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண சிறப்பு சோதனைகள் நடத்தப்படும் என்றும், பின்னர் அவர்கள் மறுவாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இருப்பினும், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
