செல்லப்பிராணிகளுக்காக சண்டையிட்ட இரண்டு அண்டை வீட்டாருக்கு இடையேயான வழக்கில் டெல்லி மேல் நீதிமன்றம் விசித்திரமான உத்தரவொன்றை பிறப்பித்தது.
இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி, காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பின்னர், அவர்கள் இந்த பிரச்சினையை அமைதியாக தீர்த்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை தனிப்பட்டது என்றும், அதற்கு எதிரான குற்றவியல் வழக்குகள் எவருக்கும் உதவாது என்றும் நீதிபதி அருண் மோங்கா கூறினார்.
எனினும், வழக்கை வெறுமனே தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, நீதிபதி அவர்களை சமூக சேவை செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, டெல்லியிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றிலுள்ள சிறுவர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு காய்கறி பீட்சாக்களையும் பருகுவதற்கு மோரையும் பரிமாறுமாறு இரு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறைப்பாட்டாளர்களில் ஒருவர் பீட்சா வியாபாரம் செய்பவர் என்பதால் நீதிபதி இந்த உத்தரவை வழங்க வழிவகுத்தது என்பதுடன் குறித்த நபரே பீட்சாக்களை தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
வழக்கைக் கையாளும் காவல்துறை அதிகாரியிடம், இந்த உத்தரவைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறும் நீதிபதி கோரியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
