காசாவில் இனப்படுகொலை இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பிரித்தானியா தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தாமதமின்றி இஸ்ரேல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அந்த சபையின் நெருக்கடி பதிலளிப்பு முகாமையாளர் கிறிஸ்டியன் பெனடிக்ட் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியிருந்தாலும், கடந்த வாரம் லண்டனில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தமைக்காக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையின் அபாயத்தைக் கூட அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் “தொடர்ந்து தயக்கம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது மிகப்பெரிய சட்ட ஆதாரங்களுக்கும் சர்வதேச இனப்படுகொலை தொடர்பான நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடையே பெருகிவரும் ஒருமித்த கருத்துக்கும் முற்றிலும் முரணானது என்றும் கிறிஸ்டியன் பெனடிக்ட் கூறினார்.
இனப்படுகொலையை மறுப்பதை பிரித்தானிய அரசாங்கம் இப்போது நிறுத்த வேண்டும் எனவும் இனப்படுகொலையைத் தடுக்கவும் தண்டிக்கவும் உடனடி, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதன் சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பை அவசரமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.