இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ் ‘ஆண்ட்ரோத்’ இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இந்திய கடற்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாக எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை இடைமறித்து தாக்கி அழிக்கும் நீர்முழ்கி எதிர்ப்பு கப்பல்கள் தயாரிப்பு பணிகளை இந்திய கடற்படை தீவிரப்படுத்தியிருந்தது.
இதன்படி இந்திய கப்பல் படைக்கு எட்டு நீர்முழ்கி எதிர்ப்பு கப்பல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் முதலாவதாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ் அர்னாலா, இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ‘ஆண்ட்ரோத்’ இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் நீர்முழ்கி எதிர்ப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஒரு தீவை நினைவுகூறும் வகையில் ‘ஆண்ட்ரோத்’ என்ற பெயர் நீர்முழ்கி எதிர்ப்பு கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலாவது நீர்முழ்கி கப்பலுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாரம்பரியமிக்க அர்னாலா கோட்டையை நினைவு கூறும் வகையில் ‘ஐ.என்.எஸ் அர்னாலா’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
