வான்கூவர் தீவில் பற்றி எரியும் வெஸ்லி ரிட்ஜ் (Wesley Ridge) காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட சில குடியிருப்பாளர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பெரும்பாலான மக்கள் இன்னும் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருப்பார்கள் என நானைமோ பிராந்திய மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்.டி.என்-ன் அவசர நடவடிக்கைகளுக்கான இயக்குனர் டக்ளஸ் ஹோம்ஸ் (Douglas Holmes) கூறுகையில், நிலைமை பாதுகாப்பானது என உறுதிசெய்யப்பட்ட பின்னரே, மக்கள் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சுமார் 538 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்த காட்டுத்தீ, நானைமோவிலிருந்து வடமேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேமரூன் ஏரியின் (Cameron Lake) வடக்கு கரையில் எரிந்து வருகிறது.
தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க, பொதுமக்கள் காட்டுத்தீ பரவும் பகுதிகளிலிருந்தும், ஹெலிகாப்டர்கள் நீர் எடுக்கும் ஏரிகளிலிருந்தும் விலகி இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
