சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவிட்ட நபரின் தகவலை கோரி , இளைஞன் ஒருவரை சிவில் உடையில் வந்த பொலிஸார் கடத்தி சென்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீதே அவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவிட்டுளளார். அது தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸார் குறித்த இளைஞனுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைக்கு அழைத்ததை தொடர்ந்து குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
அந்நிலையில் , தலைமறைவான இளைஞனின் நண்பனை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரும் விசாரணைக்கு செல்லாத நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பொலிஸார் விசாரணைக்கு என தமது மோட்டார் சைக்கிளில் இளைஞனை ஏற்றி சென்று பற்றைக்காடு ஒன்றினுள் வைத்து இளைஞனை சரமாரியாக தாக்கி விட்டு , அவ்விடத்தில் இளைஞனை கைவிட்டு சென்றுள்ளனர்.
இளைஞனை வீட்டார் தேடி சென்ற போது , வீட்டிற்கு அருகில் உள்ள பற்றைக்காட்டில் படுகாயங்களுடன் காணப்பட்ட இளைஞனை மீட்டு , பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பளை வைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்று வரும் இளைஞனிடம் தாக்குதல் சம்பவம் குறித்து பளை பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
