கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இத் திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று வெள்ளிக்கிழமை (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம தலைமையிலான மது வரி அதிகாரிகள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (6) காலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,நடுக்குடா கடற்கரை பகுதியில் இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை மீட்டுள்ளனர்.
குறித்த இரு படகுகளில் இருந்தும் 40 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மேலும் குறித்த படகுடன் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள் கடற்படையின் உதவியுடன்,மன்னார் மது வரி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் மீட்கப்பட்ட இரண்டு படகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
