காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) எபோலா வைரஸ் பரவல் நிலைமை இன்னும் தீவிரமான சூழலிலேயே நீடித்து வருவதாக ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் குறைபாடுகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டும் தரவுகள் கிடைத்துள்ளதால், நிலைமை இன்னும் சீரடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டிய எபோலா வைரஸ் பரவல், தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் காங்கோ சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா (Samuel Roger Kamba) தெரிவித்திருந்தார்.
எனினும், ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (Africa CDC) பணிப்பாளர் நாயகம் ஜீன் கசேயா (Jean Kaseya), எபோலா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் பரவல் சீராகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், பரவலின் உச்சக்கட்டம் கடந்துவிட்டது என்பதை தற்போதைய தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியாது என்றும் Africa CDC அமைப்பின் அவசர ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
காங்கோ அதிகாரிகளின் அறிக்கைகள் முழுமையற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜீன் கசேயா, தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்தால் மட்டுமே பரவலின் உச்சக்கட்டம் கடந்துவிட்டதாகக் கருத முடியும் எனக் கூறினார்.
அதேவேளை, நாட்டின் கிழக்கு இட்டூரி (Ituri) மாகாணத்தில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் லேசான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு, காங்கோ அரசுக்குத் தேவையான ஆதரவுகளைத் தொடர்ந்து வழங்க உறுதியளித்துள்ளது.


