மொன்றியல் நகரிலுள்ள கூகுள் (Google) நிறுவனத்தின் அலுவலகத்திற்கு முன்பாக, பேரணி மற்றும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற மற்றும் விரைவான வளர்ச்சியால் சமூகத்திற்கும் மனிதகுலத்திற்கும் ஏற்படக்கூடிய தீவிர ஆபத்துகளைச் சுட்டிக்காட்டியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘PauseAI‘ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதுடன், தவறான தகவல்கள் பரவுவதற்கும், எதிர்காலத்தில் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் அபாயத்திற்கும் வழிவகுக்கும் எனப் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கூகுள் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை வழிமுறைகளை முழுமையாக உறுதிப்படுத்தும் வரை, அதிநவீன செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களின் (Advanced AI Models) பயிற்சியையும் வளர்ச்சியையும் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
அண்மைக்காலமாக மொன்றியல், டொரண்டோ போன்ற முக்கிய நகரங்களில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு எதிரான விழிப்புணர்வுப் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


