மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது உரிய கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 41 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை சட்ட விதிமுறைகளை மீறி, வெளித் தரப்பினருக்கு முறையற்ற நன்மை கிடைக்கும் வகையில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 9.50 மணியளவில் பிரசன்ன சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

