மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று (11) காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள்,நானாட்டான் மற்றும் முசலி பிரதே சபைகளின் தவிசாளர்கள்,மாவட்டச் செயலக பதவி நிலை அதிகாரிகள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பாக அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பாகவும், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில் நிலவும் அதிகாரி மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வுகள் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் மன்னார் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்தும், அதன் மூலம் பிராந்திய மக்களின் சுகாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களை அதிகபட்ச பயனுள்ள முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு தேவையான வாகன வசதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கழிவு மேலாண்மை திட்டங்கள், சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து ஆராயப்பட்டது.
சிறுபோக சாகுபடியின் போது விவசாயத்துக்கு போதிய நீர் இல்லாத காரணத்தால், பயறு, சோளம் போன்ற மாற்றுப் பயிர் செய்கைகளில் கவனம் செலுத்துவது குறித்தும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு பயன்படுத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது போரினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் அரசு தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்தார்.

