மொன்றியல் பெருநகரப் பகுதியில் பொதுப்போக்குவரத்துச் சேவைகளை விரிவாக்கம் செய்யவும் நவீனப்படுத்தவும் பல புதிய திட்டங்கள் தயார் நிலையில் உள்ளபோதிலும், கடுமையான நிதிப் பற்றாக்குறை அத்திட்டங்களின் எதிர்காலத்தைப் பெருமளவில் கேள்விக்
குறியாக்கியுள்ளது.
மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம், புதிய பிரத்தியேகப் பேருந்துத் தடங்கள் மற்றும் இலகுரயில் (REM) இணைப்புகள் உள்ளிட்ட மேம்பாட்டுத்
திட்டங்களுக்கான கோரிக்கைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் அதேவேளையில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான போதிய நிதி,
கியூபெக் அரசிடமும் போக்குவரத்து அதிகாரிகளிடமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொன்றியல் போக்குவரத்து அமைப்பான எஸ்டிஎம் (STM) மற்றும் பெருநகரப் போக்குவரத்து ஆணையமான ஏஆர்டிஎம் (ARTM) ஆகிய
நிறுவனங்கள் பயணிகள் சேவையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுறாட்டைக் குறைக்கவும் பல்வேறு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக, நீல நிற மெட்ரோ பாதையின் (Blue Line Extension) விரிவாக்கம் மற்றும் மொன்றியல் நகரின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில்
அதிவேகப் பேருந்துச் சேவைகளைத் தொடங்குவது போன்றவை இதில் முதன்மையான திட்டங்களாகும். இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பயணிகள் வருகையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை
உயர்வு, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக இப்போக்குவரத்து அமைப்புகள் தொடர்ந்து நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
கியூபெக் மாகாண அரசு வழங்கும் தற்போதைய மானியங்கள் அன்றாடச் செயல்பாட்டுச் செலவுகளுக்கே போதாத நிலையில், புதிய பெரிய
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது பெரும் சவாலாக மாறியுள்ளது. போக்குவரத்து துறை நிபுணர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுப்போக்குவரத்துத் துறைக்கு ஒரு நிலைபேறான நீண்டகால நிதி மாதிரியை உடனடியாக உருவாக்கும்படி கியூபெக் மாகாண அரசை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

