அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ரூ.300 கோடி வசூல் சாதனைக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘விருமாண்டி’ படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா பின்னணியையும், இரு வேறு தெய்வங்களை நம்பும் மக்களின் வாழ்வியலையும் மனிதநேயத்தையும் மையக்கருவாகக் கொண்டு கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்திற்குப் பிறகு, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ள இரண்டாவது படம் இதுவாகும். மேலும், சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக ஆர்.கே.எஃப்.ஐ – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
மதுரையில் நடைபெறவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் மற்றும் கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து, வரும் அக்டோபர் மாதத்தில் இப்படத்தைத் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

