அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலோ அல்லது அதை நிகழ்வின் இறுதியில் பாட வேண்டும் என்றோ எந்தவொரு உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர், மாநில அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தொடர்ந்த பொதுநல மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல் எப்போது பாடப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசால் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஒரு நிகழ்ச்சியில் தேசியப் பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும் அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பது மட்டுமே விதியாகும். எனவே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவதில் எவ்வித முரண்பாடோ அல்லது தடைகளோ இல்லை என்பது நீதிமன்றத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது மற்றும் ஆளுநர் பங்கேற்ற விழாக்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு அதுவே முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்யும் வகையில் சிறப்புத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு சட்டப்பூர்வ நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

