விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்குத் தெளிவான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு முறையான சம்மன் அனுப்பப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற பெயரில் காவல்துறை தங்களைத் துன்புறுத்துவதைத் தடுக்கக் கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்திய நீதிமன்றம், விசாரணை நடத்தப்படும் விவரங்கள் மற்றும் அழைப்பாணை தொடர்பான தகவல்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் உத்தியோகபூர்வப் பதிவேட்டில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சம்மன் அனுப்பாமல் அல்லது முறையான ஆவணப் பதிவுகள் இன்றி எந்தவொரு தனிநபரையும் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கவோ அச்சுறுத்தவோ கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
வழக்கின் விசாரணையின் போது கருத்தைத் தெரிவித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “காவல்துறையினரின் சட்டப்பூர்வமான விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை. அதேவேளையில், விசாரணை என்ற போர்வையில் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்களைப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்காது” என்று எச்சரித்தார்.
காவல்துறையினரின் விசாரணைத் துன்புறுத்தல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் காவல்துறையின் அதிகார மீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த வழிகாட்டுதல்களை அனைத்துக் காவல் நிலையங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

