நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அண்மையில் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் பல்வேறு குழுக்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் பல்வேறு வெளித்தரப்பினரின் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் நிலவுகிறது.
மோதல்கள் வெடித்த சமயங்களில், கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலைகளுக்கு அருகில் நடமாடியமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சிறைச்சாலை அமைப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அல்லது அதன் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையான நேரங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

