இந்தியாவின் பீகாரில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் கோக்ரி பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் குப்தா என்ற நபர், ‘இந்திய அரசு’ எனப் பெயர்ப்பலகை பொருத்தப்பட்ட வாகனத்தில் வலம் வந்தபோது சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் பிடிபட்டார்.
காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, பதற்றமடையாமல் தனது மொபைல் போனில் இருந்த போலி ஐஏஎஸ் அடையாள அட்டையைக் காட்டியதுடன், தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜென்ட் எனக்கூறி அதிகாரிகளிடமே வாதிட்டுள்ளார்.
அவர் கூறுவது அத்தனையும் பொய் என்பதை உறுதி செய்த காவல் துறையினர், ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் உத்தரவின் பேரில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ‘இந்திய அரசு’ எனப் பலகை பொருத்தப்பட்ட இரு ஆடம்பர கார்கள், டெஸ்லா உள்ளிட்ட சொகுசு வாகனங்கள், 23 கிரெடிட் கார்டுகள், 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் 2 கலைமான் கொம்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொதுமக்களை மிரட்டியும் ஏமாற்றியும் சட்டவிரோதமாகச் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மணீஷ் குப்தா சேர்த்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

