பெண்கள் பதிவு செய்யும் பல துன்புறுத்தல் வழக்குகள் போலியானவை என நிரூபிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பொதுவான கருத்து எதையும் தெரிவிக்க முடியாது என்றும், ஒவ்வொரு வழக்கும் அதன் குறிப்பிட்ட உண்மைகளையும் சான்றுகளையும் பொறுத்தே அமையும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்கு மண்டல மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
நீதிமன்றங்களில் நீண்ட காலமாக தேங்கியிருக்கும் வழக்குகள் குறித்துப் பேசிய அவர், நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது இல்லை என்று குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட பல புதிய திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதில் மிகச் சிறந்த பலன்களை அளித்து வருவதாகவும், தேங்கியுள்ள வழக்குகள் படிப்படியாகவும் திட்டமிட்ட முறையிலும் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதே நிகழ்ச்சியில் கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் பெயர்களை மத்திய அரசு திருப்பி அனுப்புவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது சட்ட சேவைகள் ஆணையத்தின் விழா என்பதால் அதுபோன்ற விவகாரங்கள் குறித்து இங்கு பேசக்கூடாது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

